அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் டொனால்ட் ட்ரம்பை விட 10% புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று 3 ந் திகதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என்று நேற்று வெளியிடப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.பி.சி நியூஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே டிரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு ஆதரவு 52 சதவீதமாக உள்ளது,
அரிசோனா, புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர் நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பிடன் 6 புள்ளிகள், 51 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை முன்னிலை வகிப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
அக்டோபர் 29 முதல் 31 வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத வாக்காளர்கள் ட்ரம்ப் கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதத்தை தவறு என்கிறார்கள் அதே நேரத்தில் 55 சதவீத வாக்காளர்கள் அவரது நிர்வாகம் பொருளாதாரத்துடன் கையாள்வதை அங்கீகரிக்கின்றனர்.
எழுபத்தேழு வயதாகும் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும், எழுபது நான்கு வயதாகும் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றால் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மிக மூத்த வேட்பாளர் என்றும் சரித்திரம் படைக்கலாம்.
அமெரிக்க தேர்தல் திட்டத்தின் படி, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை 9.3 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்து உள்ளனர். இது 2016 தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 67.7 சதவீதமாகும்.