தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் மரணம்

நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அஜந்தகுமார் என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 01.09.2020 அன்று துபாய் நாட்டில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றிய நிலையில் இவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் காரணமாக இவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இவர் துபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவருக்கு ஒருவகை வைரஸ் உடம்பில் பரவியிருந்ததுடன் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கடந்த 01.09.2020 அன்று நாடு திரும்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே இவரை கடந்த 02.09.2020 அன்று நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன். இவருடைய உயிரிழப்பிற்கு காரணம் இவருடைய உடலில் வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் இவருடைய உடல் இன்று (07) காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.