சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் இனால் சிங்கப்பூரின் 13 ஆவது நாடாளுமன்றம் கடந்த ஜூன் 23ம் திகதி கலைக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில்,  அந்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் பொதுத் தேர்தல், கொவிட்-19 பரவலின் இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என்று சிங்கப்பூரின் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றிய, பிரதமர் லீ சியன் லூங், கொவிட் -19 நிலைமை ஓரளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொதுத் தேர்தலை இப்போது நடத்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.

தேர்தலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்புக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள  முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்கான முடிவை எடுப்பதற்கு முன் வாக்காளர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் குறித்தும் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜூன் 30 ஆம் திகதி வேட்புமனு தாக்கலுக்கான நாளாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்குப்பதிவு ஜூலை 10, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் எனவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது, அன்றைய தினம் பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!